Nov 18, 2008

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை - மறைமலை அடிகள்

மறைமலையடிகள் படைத்த முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரையிலிருந்து.....

முல்லைப்பாட்டு என்பதைப் பற்றித் தெரிய வேண்டுவன எல்லாம் ஆராயும்முன், பாட்டு என்பது எத்தகையது? என்று ஆராய்ந்து அறிந்து கொள்ளல் வேண்டும். பின்றைக் காலத்துத் தமிழ்ப் புலவர் பாட்டென்பது இன்னதென்றே அறியாராய்ப் புதுப்புது முறையாற் சொற்களைக் கோத்துப் பொருள் ஆழமின்றிச் செய்யுள் இயற்றுகின்றார். பண்டைக் காலத்துத் தண்டமிழ்ப் புலவரோ பாட்டு என்பதன் இயல்பை நன்கறிந்து நலமுடைய செய்யுட்கள் பலப்பல இயற்றினார். இங்ஙனம் முற்காலத்தாராற் செய்யப்பட்ட பாட்டின் இயல்பொடு மாறுபட்டுப் பிற்காலத்தார் உண்மை பிறழ்ந்து பாடிய செய்யுட்களைக் கண்டு மாணாக்கர் பாட்டினியல்பு அறியாது மயங்குவாராகலிற், பாட்டு என்பது இன்னதென்பதனை ஒரு சிறிது விளக்குவாம்.

உலக இயற்கையிற் கண் முதலான புலன்களுக்கு விளங்கித் தோன்றும் அழகை யெல்லாந் தன்னகத்தே நெருங்கப் பொதிந்துவைத்துப், பின் அவற்றை நம் அறிவினிடத்தே புலப்படுவண்ணந் தோற்றுவித்துப், பொருள் நிகழ்ச்சியொடு மாறுபடுதல் இல்லா இனிய ஓசையுடன் இசைந்து நடைபெறும் இயல்பினை உடையதுதான் பாட்டென்று அறிதல் வேண்டும். இன்னும் எங்கெங்கு நம் அறிவைத் தம்வயப் படுத்துகின்ற பேரழகும் பேரொளியும் பெருந்தன்மையும் விளங்கித் தோன்றுகின்றனவோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்றே அறிதல்வேண்டும். இதனை விளக்கிக் காட்டுமிடத்துப், பேரழகாற் சிறந்த ஓர் அரசி தான் மேற்போர்த்திருந்த நீலப்பட்டு ஆடையினைச் சிறிது சிறிதாக நீக்கிப், பின் அதனைச் சுருட்டிக் கீழே எறிந்து விட்டுத் துயில் ஒழிந்து, ஒளிவிளங்கு தன் நளிமுகங்காட்டி எழுந்ததை யொப்ப, இருட்கூட்டஞ் சுருண்டு மடங்கி அலைகடலிற் சென்று அடங்கிவிடுமாறு இளைய ஞாயிறு உருக்கித் திரட்டிய பசும்பொற் றிரளைபோலத் தளதளவெனக் கீழ்த் திசையில் தோன்றவும், அத்திசையின் பரப்பெல்லாம் பொன் உரைத்த கற்போற் பொலிந்து திகழவும், பசுமை பொன்மை நீலம் சிவப்பு வெண்மை முதலான நிற வேறுபாடுள்ள பொன் வெள்ளிகள் உருகி ஓடுகின்ற நிலம் போல வான் இடமெல்லாம் பலவண்ணமாய் விரிந்து விளங்கவும், கரியமுகில்க ளெல்லாஞ் செவ்வரக்கு வழித்த அகன்ற திரைச் சீலைகள் போலவும் ஆங்காங்குச் சொல்லுதற் கரிய பேரொளியொடு திகழவும் உலகமங்கை நகைத்தாற் போலப் புதுமையுற்றுத் தோன்றும் விடியற்கால அழகெல்லாம் பாட்டென்றே அறிதல்வேண்டும். ஆ! இங்ஙனந் தோன்றும் அவ் விடியற்கால அழகினைக் கண்டுவியந்த வண்ணமாய் மீன்வலையொடு கடற்கரையில் நிற்குஞ் செம்படவனைக் காட்டினுஞ் சிறந்த புலவன் யார்?

அவ் விடியற்காலையிலே முல்லை நிலத்து மேய்ப்பர்கள் ஆண்கன்றுகளைத் தொழுவத்திலே தாம்பினாற் கட்டிவைத்து ஆன்நிரைகளை அடுத்துள்ள மலைச்சாரலிற் கொண்டுபோய்ப் பசிய புல் மேயவிட்டுத் தாம் மரநழலிற் சாய்ந்திருந்து கொண்டு, தமக்கெதிரே பச்சிலைப் போர்வை மேற்கொண்டு கரிய முகில்கள் நெற்றி தழுவிக் கிடப்பப் பெருந்தன்மையொடு வான் அளாவித் தோன்றும் மலையினை அண்ணாந்து பார்த்தவராய் அவர்கள் அச்சமும் மகிழ்ச்சியும் அடையும் போது அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

காதலினாற் கட்டுண்ட இளைஞரும் மகளிரும் நெகிழாத காதலன்பின் மிகுதியால் தோளொடு தோள் பிணையத் தழுவிக்கொண்டு, மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலைகளிற் களிப்பாய் உலவுந்தொறுந் தூங்கணங் குருவிகள் மரக்கிளைகளில் வியப்பான கூடு கட்டுதலையும்; மரப் பொந்துகளி லிருந்து மணிப்புறாக்கள் கூவுதலையும்; ஆண்மயில்கள் தம் அழகிய தோகையினை விரித்துப் பெடைமயில் கண்டுகளிப்ப ஒருபுறம் ஆடுதலையும்; மலையிலிருந்தொழுகும் அருவிநீர் கூழாங் கற்படையின்மேற் சிலுசிலுவென்று ஓடிவந்து அச்சோலையின் ஒரு பக்கத்துள்ள ஆழ்ந்த குட்டத்தில் நிரம்பித் துளும்ப, அதன்கண் உள்ள செந்தாமரை முகிழ்கள் அகன்ற இலைகளின்மேல் இதழ்களை விரித்து மிகச் சிவப்பாய் அலர் தலையும் விரும்பிக்கண்டு, நறுமணங் கமழும் பூக்களை மரங்களினின்றுந் தாவிப் பறித்துக் கரிய கூந்தலில் மாறிமாறி அணிந்துஞ், சிவக்கப் பழுத்த கொவ்வைக்கனி போன்ற தம் இதழ்கள் அழுந்த முத்தம் வைத்துக்கொண்டுந், தேன் ஒழுகினாலென இனிய நேயமொழிகள் பேசிக்கொண்டும் அவர்கள் செல்லுமிடத்து அங்கும் பாட்டு உண்டென்றே அறிதல் வேண்டும்.

சுருங்கச் சொல்லுங்கால் எங்கெல்லாம் நமதுணர்வைக் கவர்கின்ற பேரழகு உலக இயற்கையிற் காணப்படுமோ அங்கெல்லாம் பாட்டு உண்டென்பது தெளியப்படும். ஆயினும், ஒரு நல்லிசைப் புலவனால் இயற்றப்படுகின்ற பாட்டுப்போல அது நூலினிடத்தே காணப்படுவதில்லையே யெனின்; நன்கு வினாயினாய், ஒரு நூலின்கண் எழுதப்பட்டு, உலக இயற்கையின் அழகை நமதுள்ளத்திற் தோன்றக் காட்டி நமக்கு உவப்புணர்வு பயக்குஞ் சொல்லின் தொகுதியான பாட்டு நூலின்கண் எழுதப்படுகின்ற வடிவுடைய பருப்பொருளாகும்; உலக இயற்கையின் அழகோடு ஒருங்கொத்து நின்று, கண் முதலான புலன்வழிப் புகுந்து நமக்கு உவப் புணர்வு மிகுதியினை வருவிக்கும் பாட்டு வடிவம் இல்லாத நுண்பொருளாகும். இங்ஙன மாகலின் உலக இயற்கையிலெல்லாம் பாட்டு உண்டென்பது துணிபேயா மென்க.

அல்லாமலும், உயிர் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் நம்முடைய நினைவுகளெல்லாம் உணவு தேடுதலிலும், பொருள் தொகுப்பதிலும், மனைவிமக்கட்கு வேண்டுவன திரட்டிக் கொடுத்தலிலும், பிறர் இட்ட ஊழியஞ் செய்தலிலுமாகப் பலவாறு சிதறி அருமை பெருமையின்றிக் கொன்னே கழிந்து போகும் மக்களுடைய நினைவுகளுஞ் சொற்களுஞ் செயல்களும் நமக்கு இன்பந் தராவாகலின் அவற்றை அறிய வேண்டுமென விரும்புவாரும் உலகில் யாரும் இலர். இனி, இவ்வாறு கழியும் நாட்களில் ஒரோவொருகால் அவர் அறிவு வறிய நினைவுகளின் வேறாகப் பிரிந்து, உலக இயற்கையிற் படிந்து அதன் வண்ணமாய்த் திரிந்து தெளிவுற்று விளங்கும்போது அவ்வறிவிற் சுரந்து பெருகும் அரிய பெரிய கருத்துக்களையே நாம் அறிதற்கு மிக விழைகின்றோம். இங்ஙனந் தோன்றும் அரிய பெரிய கருத்துக்களின் கோவை ஒழுங்கினையே பாட்டென்றும் அறிதல் வேண்டும்.

இன்னும், மக்கள் வாழ்நாள் என்கின்ற நீரோடையிலே வறுநினைவுகளான கலங்கற் பெருநீர் பெருகிச் செல்லும்போது, உலக இயற்கை யென்னும் மலைக் குகைகளிலே அரித்து எடுத்துவந்த அருங்கருத்துக்களான பொற்றுகள் இடையிடையே ஆழ்ந்து அவ்வோடையின் அடிநிலத்திற் சிதர்ந்து மின்னிக்கிடப்ப, நல்லிசைப் புலவன் என்னும் அரிப்புக்காரன் மிக விழைந்து முயன்று அப்பொற்சிதர்களை யெல்லாம் ஒன்றாகப் பொறுக்கி எடுத்துத் தன் மதிநுட்ப நெருப்பிலிட்டு உருக்கிப் பசும்பொற் பிண்டமாகத் திரட்டித் தருவதே பாட்டு என்றும் அறிதல் வேண்டும்.

இன்னும், மக்கள் அறிவு என்கின்ற தித்திப்பான அரிய அமிழ்தம் பலவகையான குற்றங்களொடுங் கலப்புற்றுத் தூயதன்றாய்ப் போக, நல்லிசைப்புலவன் தன் பேரறிவினால் அதனைத் தெளிய வடித்து அதன் இன்சுவையினை மிகுதிப்படுத்தி, நாமெல்லாம் அதனைப் பருகிப் பெரியதோர் ஆறுதலடையக் கொடுப்பான்; அங்ஙனங் கொடுக்கப்படுந் தூய இனிய அறிவின் விளக்கமும் பாட்டென்றே அறிதல் வேண்டும். இக்கருத்துப் பற்றியே மிலிட்டன் என்னும் ஆங்கிலமொழி வல்ல நல்லிசைப் புலவரும், "பாட்டென்பது மக்கள் மன அறிவினின்றும் வடித்து இறக்கப்பட்ட தூய அமிழ்தம் ஆம்"1 என்று உரை கூறினார். இது நிற்க.

இனி, இங்ஙனம் இயற்றப்படுகின்ற பாட்டு உலக இயற்கையழகுடன் பெரிதும் பொருந்தி நடத்தல் வேண்டும். இன்னும் இதனை நுணுகி நோக்குமிடத்துப் பாட்டுப் பாடுதலில் வல்லவனான நல்லிசைப் புலவனுக்கும் உலக இயற்கையினைப் பலவகை வண்ணங்களாற் குழைத்து வரைந்து காட்டுகின்ற ஓவியக்காரனுக்கும் ஒற்றுமை மிக உண்டென்பது தெள்ளிதிற் புலப்படும். ஆயினும், ஓவியக்காரன் வரைகின்ற ஓவியங் கட்புலனுக்கு மட்டுமே தோன்றுவதாகும்; நல்லிசைப் புலவன் அமைக்கின்ற பாட்டோ கண் முதலான புலன்களின் அகத்தே விளங்கும் உள்ளத்திலே சென்று தோன்றுவதாகும். ஓவியக்காரன் தான் எழுத எடுத்துக்கொண்ட பொருட்டோற்றத்தைப் பன்முறையும் நுண்ணிதாக அளந்தளந்து பார்த்துப்பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஓவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவிவிட்டானாயினும் அவ்வோவியத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றாதொழியும். நல்லிசைப்புலவனோ அங்ஙனம் அவனைப்போல் ஒவ்வொன்றனையும் விரிவாக விளக்கிக் காட்ட வேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற்பவன்; புலவனோ மன அறிவைப் பற்றி நிற்பவன்.

புலனறிவோ பருப்பொருள்களை விரித்தறியும் இயல்பிலுள்ளது; மனவறிவோ அப்புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுந் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது! அம்மம்ம! மனவறிவின் ஆற்றலை யாம் என்னவென்று எடுத்துரைப்பேம்! அணுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும், மலையை மறுநொடியில் ஓர் அணுவினுங் குறுகச்செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறிவினை நல்லிசைப் புலவன் என்னும் மந்திரகாரன் தன் மதிநுட்பமாகிய மாத்திரைக் கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும்.

இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஓவியக்காரன் அச்சுறுத்தும் அகன்றதொறு கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயிற் பலநாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரிய மரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோடொன்று பிணைந்து வெளிச்சம் புகுதாமல் தடை செய்து நிற்றலையும், அக்காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையிலுள்ள இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுங்கால் அவை தோன்றுந் தன்மையினையும், உள்ளே இருள் திரிந்து பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின் மேல் மிக வருந்தி முயன்று எழுதிக் காட்டல் வேண்டும். இஃது அவனுக்குப் பெருநாள் வினையாக முடியும். நல்லிசைப்புலவனோ, 'பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற்கும் இருண்ட காடு' என்று சில சொற்களைத் திறம்படச் சேர்த்துக் கூறுதல் ஒன்றினாலேயே ஒரு நொடிப்பொழுதில் அவ்வோவியக்காரனாலுங் காட்ட முடியாத ஒருபெரு வியப்புணைர்வினை நம் மனத்தகத்தே விளைவிக்கும் ஆற்றலுடையனாவன். இஃது இவனுக்கு மிக எளிதிலே முடிவதொன்றாம். இங்ஙனம் மனவுணர்வினை எழுப்புதல் மிக எளிதிலே செய்யக்கூடிய தொன்றாயினும், அம்மனவியல்பின் நுட்பம் உணர்ந்து அவ்வாறு செய்யவல்லராயின நற்பெரும்புலவர் உலகிற் சிலரேயாவர். புலவனுடைய திறமையெல்லாஞ் "சில்வகையெழுத்திற் பல்வகைப் பொருளைக்" காட்டுகின்ற அரும்பெருஞ் செய்கையினாலே தான் அறியப்படும். இங்ஙனம் பாட்டு வழக்கின் நுட்பமுணர்ந்து பிற மொழிகளிற் புகழ்பெற்று விளங்கிய நல்லிசைப் புலவர்கள் ஓமர்2, தாந்தே3, செகப்பிரியர்4, மிலிட்டனார்5, கீதே6, காளிதாசர் முதலியோரும், நஞ்செந்தமிழில் திருவள்ளுவர், நக்கீரனார், இளங்கோவடிகள், கூலவாணிகன் சாத்தனார், மாங்குடி மருதனார், கபிலர், சேக்கிழார் முதலானோரும் பண்டைக்காலத்து ஏனை நல்லிசைப் புலவருமேயாவர். இன்னும் இதனை விரிப்பிற் பெருகுமென்றஞ்சி இத்துணையின் நிறுத்துகின்றோம்.

2. பழந்தமிழ்ப் பாட்டின் சிறப்பியல்பு

"முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
தான் துழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே."

என்பது குறுந்தொகை2 என்னும் பழைய தமிழ் நூலில் உள்ள ஒரு பாட்டு. தன் மகள் தன் காதற்கணவன் வீட்டில் எப்படியிருக்கின்றாள் என்பதைக் கண்டறியும் பொருட்டுச் சென்ற செவிலித்தாய், அவ்விருவரும் மிக்க நேயமுடையராய் வாழ்வது கண்டு, தன்னுள்ளே மகிழ்ந்து சொல்லியதாக இது பாடப்பட்டிருக்கின்றது. " என்மகள் வற்றக்காய்ச்சின கட்டித் தயிரைப் பிசைந்த காந்தள் மலர்முகிழ்போற் சிவந்த மெல்லிய விரல்களால், நன்கு கழுவி வெண்மையான உயர்ந்த ஆடை சமையல் செய்யும் விரைவினால் இடுப்பினின்றும் அவிழ்ந்து கழல அதனைக் கைகழுவாமலே உடுத்துக் கொண்டு, குவளைப் பூப்போன்ற மை தீட்டிய தன் கண்களிலே தாளிப்புச் செய்யும் புகைபட்டு மணக்கவும் அதனையும் பாராது, தான் துடுப்பினால் துழாவி மிக்க அன்பொடு சமைத்த சுவை மிகுந்த புளிப்பாகினைத் தன் கணவன் மிகவும் இனிதாயிருக்கின்றதென்று சொல்லிக்கொண்டே உண்ணுதலைப் பார்த்து ஒளிமிகுந்த நெற்றியினையுடைய என் மகளின் முகம் உள்ளுக்குள்ளே நுட்பமாய் மகிழ்ச்சி அடைந்தது" என்பது தான் இப்பாட்டின் பொருள். பாருங்கள்! இச்செய்யுளின் இயற்கையழகும், இதன்கட் காட்டப்பட்டிருக்கும் மனவுணர்வின் இயல்பும் எவ்வளவு அருமையாக இருக்கின்றன!

காதற்கணவனும் மனைவியுங் கெழுமி இருந்து இல்லறம் நிகழ்த்தும் ஒழுக்கம் முல்லை எனப்படுமாகலின், இவ்வொழுக்கம் நடைபெறுகின்ற முல்லை நிலத்திற்கு ஏற்ப 'முளிதயிர் பிசைந்த' என்றார்; என்னை? தயிர்பால் முதலியன ஆனிரைமிக்க முல்லை நிலத்திற்கே உரியனவாகலின் தன் கணவன் மேலுள்ள காதன்மிகுதியினால் ஏவலரும் பிறருஞ் சமையல் செய்வதற்கு ஒருப்படாது தானே தன் மெல்லிய சிவந்த விரல்களால் தயிரைப் பிசைதலும், கணவன் பசித்திருப்பானே என்னும் நினைவால் விரைந்து சமையல் செய்யும்போது இடுப்பிற்கட்டிய உயர்ந்த ஆடை கழலவும் பிசைந்த கையினைக் கழுவி விட்டு உடுப்பதற்குட் காலம் நீண்டு அப்புளிப்பாகின் பதங் கெடுமென உணர்ந்து அக் கையுடனே அவ்வுயர்ந்த ஆடையினைக் கட்டிக் கொள்ளுதலும், அங்ஙனம் பிசைந்து திருத்திய புளிப்பாகினைத் தாளிக்கும் போது மேல் எழும் புகை தன் குவளைப்பூவன்ன கண்ணிற்படவும் அப்புறந் திரும்பினால் பதங்கெடுமே என்று முகந்திரும்பாமல் அதனை விரைந்து துழாவலும், அங்ஙனமெல்லாந் தன் வருத்தத்தினையும் பாராது சமைத்த சுவைமிக்க அப்புளிப்பாகினைக் கணவன் மகிழ்ந்துண்ணல் கண்டு தன் மகிழ்ச்சி வெளியே தெரியாமல் அவள் முகம் மலர்ந்து காட்டுதலும், இயற்கையே தனக்குள்ள நாணத்தால் அவள் முகஞ் சிறிது கவிழ்ந்து நிற்க அவளது ஒளிமிக்க நெற்றியே அம்மகிழ்ச்சிக் குறிப்புப் புலனாக முன் விளங்கித் தோன்றுதலுஞ் சில சொல்லில் மிக விளங்கக்கூறிய நுண்மை பெரிதும் வியக்கற்பால தொன்றாம்.

உள்ளமுவக்கும் நிலத்திற் கணவனும் மனைவியும் நேயமாய் மருவிவாழும் இயற்கை இப் பாட்டின்கண் ஓவியம் எழுதிக் காட்டினாற் போல் எவ்வளவு உண்மையாகவும் இனிதாகவுஞ் சொல்லப் பட்டிருக்கின்றது! இப் பொருளருமையோடு இச்செய்யுளில் உள்ள சொற்கள் எல்லாம் நீர்மடையில் தெளிநீர் மொழு மொழுவென்று ஓடுவது போல் ஓசையின்பம் உடையவாய் ஒழுகுதலும், ஒரு சொல்லாயினும் பொருளின்றி வேண்டா கூறலாகாமல் முன்னும் பின்னுமுள்ள பொருட்டொடர்புக்கு ஏற்ப இடையே முழுமுழுச் சொற்களாய் அமைந்து நிற்றலும் மிகவும் பாராட்டற்பாலனவாகும் என்பது.

இத்துணை நுட்பமான உலகியற்பொருள் அறிவு பண்டைக்காலத்துத் தண்டமிழ்ப் புலவரிடங் காணப்படுதல் போல, மற்றைமொழிகளில் வல்லராய் விளங்கிய ஏனைப் பழம்புலவரிடத்துங் காணப்படுதல் அரிது. இன்னும் இவ்வாறே பழைய தமிழ்ப்புலவர் உலக இயற் பொருட்காட்சிகளைப் புனைந்துரைத்த முறையும், அவ்வுலக இயற்கைக்கும் மக்களியற்கைக்கும் உள்ள பொருத்தம்பற்றி அவர் வெளியிட்ட அரிய கருத்துக்களின் விழுப்பமும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களிற் பரக்கக் காணலாம். ஆண்டுக் கண்டு கொள்க. தி.மு. நானூறு ஆண்டு முதல் தி.பி. நூறாண்டு வரையில் தொடர்புற்று விளங்கிய செந்தமிழ் இலக்கிய காலத்தில், இயற்றப்பட்ட நூல்களின் இயற்கையும், அந் நூல்களுக்கும் முல்லைப்பாட்டிற்கும் உள்ள இயைபும், அக்கால வரலாறும்.

இனித் திருவள்ளுவர் பிறப்பதற்கு முற்சென்ற நூற்றாண்டுகளிலே மிகவும் புகழ்பெற்று விளங்கிய புலவர் காலமும், அவர் பிறந்த பின் நூற்றாண்டிலே அவ்வாறு விளங்கிய புலவர் காலமுஞ் செந்தமிழ்மொழி மிக உயர்ந்த நிலையிலே இருந்து திகழ்ந்த காலமாகுமென்று அறிதல் வேண்டும். திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும், அவர் பிறந்தபின் ஒரு ஐந்நூறாண்டுந் தமிழ்மொழி மறுவற்ற மதிபோற் கலைநிரம்பி விளங்கிய காலமாகும். இக்காலத்திலே சிறந்த புலவர் பலர் தோன்றிப் பலவகையான அரிய பெரிய செந்தமிழ் நூல்கள் இயற்றினார். இப் புலவர்களைப் போற்றித் தமிழை வளம்படுத்தற்கு ஆவல்மிக்க அரசர்பலரும் வள்ளல் பலரும் ஆங்காங்கு மிக்கிருந்தனர். தமிழ் அரசர்கள் பலர் கல்வி வளத்தாலுஞ் செல்வவளத்தாலும் மேம்பட்டும், போர் வல்லமையிலும், பெருமையடைந்து, தமிழ்மொழியினைப் பலவிடங்களிலும் பெருகச் செய்வதிற் கருத்தூன்றினராய் இருந்தார்.

இக்காலத்திலேதான் தனக்கு ஒப்பும் உயர்வும் இன்றி விளங்காநிற்குந் திருக்குறள் என்னும் அரும் பெருநூல் எழுதப்பட்டது; சிலப்பதிகாரம், மணிமேகலை முதலான சிறந்த தமிழ்க்காப்பியங்களும், பழமொழி, நான்மணிக்கடிகை முதலான அறநூல்களுந் தோற்றமுற்று எழுந்தன. இவ்வைந் நூறாண்டுகளுக்கு முன்னும் பின்னு மிருந்த தமிழ்ப் புலவர்களாற் பாடப்பட்டுச் சிதறிக்கிடந்த அருந்தமிழ்ப் பாட்டுக்களெல்லாம் ஒருங்கு தொகுக்கப்பட்டு, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை முதலிய வகைவகைத் தொகை நூல்களாக இக்காலத்திலேதான் ஒழுங்குபடுத்தப்பட்டன. பண்டைக் காலத்திலே செய்யப்பட்ட தொல்காப்பியம் என்னும் அரியபெரிய தமிழிலக்கணத்தில் மிகச் சிறந்த பகுதியான அகப்பொருளின் விரிவையெல்லாஞ் சுருக்கி அதனை வடித்த பிழிவாக இயற்றப்பட்ட இறையனாரகப் பொருள் என்னும் மனவியற்கை நூல் பன்னெடுங்காலமாக மறைந்து கிடந்து பின்னர் இக்காலத்திலே தான் வெளிவந்துலாவலாயிற்று.

இன்னும் இக் காலத்திலே இன்றியமையாது அறியற் பாலதாஞ் சிறப்பியல்பு ஒன்றுண்டு. இதற்கு முன்னெல்லாந் தமிழ் பெரும்பாலுஞ் செய்யுள் வழக்கிலேயே பெருகி வந்தது; மற்று இக்காலத்திலோ அதனோடு உரை வழக்கும் விரவிப் பரவத் தொடங்கிற்று; சொல் விழுப்பமும் பொருள் விழுப்பமும் பொதிந்த மிக இனியதோர் உரை மிக நுணுக்கமான அறிவினையுடைய நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவரால் இறையனாரகப் பொருள் என்னும் நூலுக்கு வரைந்து தரப்பட்டது. இவ்வுரை சூத்திரப்பொருளை இனிது விளக்கும் பொருட்டே எழுதப்பட்டதாயினும், மற்றை உரைகள் போற் சுருங்காது மிக விரிந்து இன்றியமையாது உணரற்பாலனவாம் அருட்பெருந் தமிழ் நுட்பங்களெல்லாம் ஒருங்கு நிரம்பிப் பொலிகின்றது. ஆகவே, இக் காலத்தில் மிகச் சிறந்த உரையாசிரியராய்த் தோன்றித், தமிழ் மொழியிற் பல வகையான நல்ல சீர்திருத்தங்களெல்லாஞ் செய்து, தமிழ்ப் பயிற்சியைப் பெருகச் செய்து வந்த நற்பெரும் புலவர் ஆசிரியர் நக்கீரனார் தாமென்று அறியற்பாற்று. இதற்குப் பிற்காலத்தே வடமொழிக் கலப்பாற் புதிது தோன்றிய விருத்தப்பா என்பது, இவ்வைந் நூறாண்டுகளும் விரிந்து பெருகி வழங்கிய தமிழ் நூல்களில் எட்டுணையுங் காணப்படாமை பெரிதும் நினைவு கூரற்பாற்று. பௌத்த சமயத் தோற்றமும் பெருக்கமும்

இனி, இங்ஙனந் தமிழ் பெருக்கமுற்று விளங்குதற்கு ஒரு பெருந் துணைக்காரணமாய் இருந்தது யாது? என்று ஆராயப் புகுவார்க்குப், பௌத்தசமயம் ஆங்காங்கு விளக்க முற்றுப் பரவி வந்தமையேயா மென்பது புலப்படும்.

பண்டைக் காலத்தே ஆசியாக் கண்டத்தின் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்திய நாடு முழுவதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர்4. தமிழர் இருந்த இவ்விந்திய நாடு பெரும்பாலும் வெப்பம் மிகுந்த நாடாதலால் இதிலிருந்த அவரெல்லாங், குளிர் மிகுந்த ஆசியாக் கண்டத்தின் வடக்கேயுள்ள ஆரிய மக்களைப் போல் அத்துணை உடல் வலிமை யுடையராக இருந்திலர். உடம்பில் உரங்குன்றி யிருந்தமையால் தமிழர் தமக்குள்ளே கலாம் விளைவித்து ஒற்றுமை குலைதற்கு இடம்பெறுதலின்றிப் பெரும்பாலும் ஒருமைப்பாடு உடையராய் நாட்கழித்தனர். உடல் வலிவின் குறைவால் அவர் மன அடக்கம் பெற்று எதனையும் ஆழ்ந்தறியும் இயல்புடையரா யிருந்தனர். உலக இயற்கையிலுள்ள அழகினைக் கண்டு வியந்து அவ்வளவில் அமைந்து விடாமல், அவ்வியற்கையின் உள்ளே நுழைந்து அங்கெல்லாம் பிறழாத ஓர் ஒருமைப்பாடும் அதனை அங்கே நிலைபெறுத்தி மறைந்து கிடக்கும் ஓர் உயிர்ப் பொருளினிருப்புங் கண்டறிந்து களிப்படைந்தனர். அங்ஙனம் இவ்வுலக இயற்கையில் மறைந்து ஊடுருவிக் கிடக்கும் அவ்வுயிர்ப்பொருளினையே கடவுள் என்று துணிந்து, அதனை மனத்தால் நினைந்து வாயால் வாழ்த்தி மெய்யால் வணங்கி வழிபட்டு வாழ்ந்தனர். அவர் தமது உடல் வலிவின் குறைபாட்டாற் பலப்பல வகையான சடங்குகள் இயற்றி வழிபடுதற்கு ஒருப்படாராய்த் தனியே ஓர் இடத்தில் மன அமைதியோடு இருந்து அக்கடவுட் பொருளை மனத்தாற் பலகால் உறைத்து நினைந்து, அதனால் அறிவாழ முடையராய்த் துலங்குவாராயினர்.

இவர் இவ்வாறு இருப்ப, ஆசியாவின் வடபகுதிகளில் இருந்த ஆரியரோ குளிரால் உடம்பு இறுகி மிக்க வலிவுஞ் சுருசுருப்பும் உடையரா யிருந்தனர்; உடம்பு வலிவு மிகுதியும் உடைமையாலுங், குளிரும் பனியும் மிகுந்த அவ்வடபகுதிகளில் உணவுப் பண்டங்கள் வேண்டும் அளவு கிடைத்திலாமையாலும் அவர்கள் ஓரிடத்தில் அமைதியாய் இருக்கப் பெறாமல், தொகுதி தொகுதியாகப் பல திசைகளிற் பிரிந்து போய் அங்கங்குள்ளாரொடு போர் புரிந்தும் அல்லாதவர்க்குக் கீழடங்கியும் ஆங்காங்குக் குடியேறி வாழ்ந்துவரலாயினர். அவர் மற்றையோருடன் போர் இயற்றப்போன காலங்களிலெல்லாந் தாமே வெற்றி பெறும் பொருட்டு அதனைப் பெறுவிக்கும் உயிர்த் துணையை நாடத் தலைப்பட்டனர். அதனால், தம் முன்னோரில் இறந்துபட்டவர்களான இந்திரன் வருணன் மித்திரன் முதலியவரின் ஆவிகளையே தெய்வங்களெனத் துணிந்து வழிபடலானார்; வழிபடும் காலங்களிலெல்லாந் தாம் உணவாக அயின்று வந்த பலவகையான விலங்குகளைக் கொன்று, அவற்றின் இறைச்சிகளைத் தேவர்க்கு ஊணென ஊட்டி வேள்வி செய்தும், வேள்விச் சடங்குகளைப் பலவேறு வகையவாய்ப் பெருக்கி இயற்றியும் வந்தனர். (இருக்கு வேதத்தின் முதன் மண்டிலத்தில் உள்ள)

(-33-) "இந்திரனே, எல்லாம்வல்லவனே, மிகுந்தபொருட்
களஞ்சியங்களை ஒருங்கு சேர்த்துக் கொண்டு எம்முடன்
வாணிகஞ் செய்யாதே! (3)
செல்வத்தின் மிக்க தஸ்யுவை நீ தனியாகவே நின் குலிசப்
படையாற் கொன்று, இந்திரனே, நீ நின் துணைவருடன்
ஏகுகின்றாய்!
தொன்றுதொட்டே சடங்குகள் செய்யாரான அவர்கள்,
வான்வெளிக்குச் சேயராய்ப், பலமுகமாகத் தப்பியோடி
அழிந்தனர். (4)

(-51-) ஆரியர்களையுந் தஸ்யுக்களையும் நன்றாய் வேறுபிரித்தறிந்து
கொள்க! சடங்குகள் இயற்றாத அவர்களைத்,
தருப்பைப்புற் பரப்புவோன்பால் ஒப்புவித்திடுக! (8)

(-53-) இரிஜிஸ்வான் கீழ்ப்படியானாய் அவர்களை முற்றுகை செய்த
அந்நாளில், வங்கிரிதனுடைய நூறு கோட்டைகளையும்
நீ அழித்தன்றோ! (8)
துணைவ ரில்லாத சுசரவர்களுடன் போர்புரியும் பொருட்டு,
அறுபதினாயிரத்துத் தொண்ணூற்றொன்பது காலாட்
களுடன் படையெடுத்து வந்த மக்களுள் அரசரான
இருபதின்மரையும், ஓ இந்திரனே, பரந்த புகழுடையாய்,
நீ எல்லாவற்றையும் மேற்கடந்த தேர் உருளைகளால்
அழித்துளையன்றோ! (9)

(-103-) இந்திரனே, தஸ்யுவைத்தெரிந்து அவன்மேல் நின்கணையை
ஏவுக! ஆரியனுடைய ஆற்றலையுஞ் சிறப்பையும் மிகுதிப்படுத்துக!(9)

(-163) தெய்வத்தை நோக்கி நினைந்த மனத்தினதாய், வலிய குதிரை
வெட்டப்படுதற்கு முன்வந்து நிற்கின்றது.
அதற்கு உறவினதான வெள்ளாடும் அதற்கு முன் ஓட்டப்பட்டு
வந்திருக்கின்றது; இருடியரும் பாடகரும் அதன்பின் வருகின்றனர். (12)
அக்குதிரை மிகச்சிறந்த கொட்டிலுக்கு வந்திருக்கின்றது. தன்
தாய் தன் தந்தையின் பால் வந்திருக்கின்றது.
நன்கு வரவேற்கப்பட்டு இன்று அது தேவர்கள்பாற்
செல்லும்: அதனைப் பலியாகக் கொடுப்பவனுக்கு அது
பல நன்கொடையினைத் தரும்." (13)

என்னும் இவைபோன்ற பாட்டுக்களால் அவர் அவ்வியல்பு உடையராதல் துணிப்படும். இவ்வியல்புள்ள ஆரியர் இந்தியாவினுட் புகுந்த போது அங்கே தமக்கு முன்னிருந்த தமிழரிற் சிறிது கருந்தோற்றம் உடையராய் இருந்தவர் தமக்கெல்லாந் தஸ்யுக்கள், தாசர்கள் என்னும் பெயர்கள் இட்டு வழங்குவாராயினர். கிரேக்கர் மற்றை நாட்டவரைப் பார்பேரியர் என்றும், தமிழர் ஏனையோரை மிலேச்சர் என்றும் அழைத்தல் போல ஆரியருந் தமிழரிற் சிலரை அவ்வாறு பெயரிட்டழைத்தனர். தமிழர் முன்னாளில் ஆரியரையெல்லாம் மிலேச்சரென்று அழைத்தமை "மிலேச்சர் ஆரியர்" என்னுந் திவாகர பிங்கலத்தைச் சூத்திரத்தால் நன்கறியப்படும். உடல் வலிமை மிகவும் உடைய ஆரியர் இந்தியாவினுட் புகுதலுந் தமிழரிற் சிலர் அவரொடு போர் புரிந்து தோல்வியடைந்தனர்; சிலர் அமைதியின் பொருட்டு மலைகளிலுங் காடுகளிலும் போய் இருந்தனர்; சிலர் கடும் போர் மலைந்து ஆரியரை வென்றனர்; சிலர் தாந்தாம் இருந்த இடம்விட்டுப் பெயராமல் ஆரியரை விருந்தாக ஏற்று அவருடன் உறவாடி அவர் வழக்க ஒழுக்கங்களிற் சிலவற்றைத் தாந் தழுவியுந், தம் வழக்க ஒழுக்கங்களை அவர் தழுவுமாறு செய்வித்தும் அவரோடு ஒருமையுற்று வாழத் தொடங்கினர். இவ் விருவகை இனத்தாரும் ஒருவரோடு ஒருவர் மருவி வாழும் நாட்களில் அவரவர் தத்தமக்கே உரிய வழக்கவொழுக்கங்களை முழுவதுந் திரித்துப் பிறழ்த்தி விடாமல், அவை தம்மிற் பெரும்பான்மையவற்றை முன்னிருந்தபடியே வைத்துக் கைக்கொண்டு கடைப்பிடித்து ஒழுகினார்.

இக்காலத்தில் ஆரியருட் குருக்கள்மார் பலர் தோன்றிப் பலவகையான வேள்விகள் செய்தல் வேண்டும் என்று வற்புறுத்தி அவற்றைத் தமிழ அரசர் உதவியாற் செய்து வந்தனர்; அப்போதுதான் அவ்வேள்விச் சடங்குகள் செய்ய வேண்டும் முறைகளை மிக விரித்தெழுதிப் பிராமணங்கள் இயற்றப்பட்டன. எல்லை இல்லாத ஏழை விலங்கினங்களைக் கொலை செய்து இயற்றப்படும் வேள்விகளும் வேள்விச் சடங்குகளும் ஆரியக் குருமார்களின் பிறழ்ச்சி அறிவால் எங்கும் மிகுந்து வரவே, உயிர்க்கொலைக்கு இயற்கையிலே உடம்படாத தமிழரில் அறிவான்மிக்க சான்றோர்கள் "இங்ஙனந் தீதற்ற உயிர்களின் உடம்பைச் சிதைத்து வேள்விகள் செய்தலாற் போதரும் பயன் என்னை?" என்று தம் ஆரிய நண்பருடன் நயமாய்க் கலந்து வழக்கிட்டு அவரிற் சிலரைத் தம்வழிப்படுத்திக் கொண்டனர்.

இங்ஙனந் தமிழரின் அறிவாழ ஆராய்ச்சியினை ஆரிய நன்மக்கள் சிலர் தாமுந் தழுவி ஒழுகப் புகுந்த காலத்திலே தான் உபநிடதங்கள் எழுதப்பட்டன. இவ்வுபநிடதங்கள் ஆரியர்க்கு எட்டாதிருந்த அறங்களை அறிவுறுத்தி, அவர் செய்துபோந்த உயிர்க்கொலையினை நிறுத்துதற் பொருட்டாகத் தமிழ்ச் சான்றோர்களால் இயற்றப்பட்டனவா மென்பதற்கு அவ்வுபநிடதங்களிலேயே மறுக்கப்படாத சான்றுகள் பலவிருக்கின்றன5. இங்ஙனம் உபநிடதங்கள் எழுதப்பட்ட பின்னரும் விலங்கினங்களைப் பலியிட்டுச் செய்யும் வேள்விகள் சிறிதுங் குறைபடாமல் ஆரியர்க்குள் மிகுந்து வந்தமை யானும், ஆரியக் குருக்கள்மார் தங்கொள்கைக்கு இணங்காத தமிழரையும் அது செய்யும்படி வலிந்து வருத்தின மையானும் ஆரியர்க்குந் தமிழர்க்கும் இதன் பொருட்டு வழக்குகளும் எதிர்வழக்குகளும் நேர, அவ்வமயத்தில் வட நாட்டிலிருந்த தமிழ அரசகுலத்திற் கௌதமசாக்கியர் என்பார் தோன்றிப் பழைய தமிழ்மக்கள் ஆராய்ந்து வந்த அரிய நல்லொழுக்க முறைகளை எடுத்து விரித்துச் சொல்லப் புகுந்தார். கல்லாத மக்கள் மனமுங் கரைந்து உருகும்படி மிக்க இரக்கத்துடன் நல்லொழுக்கங்களின் விழுப்பத்தை எடுத்து விரித்து, இந் நல்லொழுக்கங்களை ஒருவன் வழுவாமற் றழுவி நடப்பனாயின் அவனுக்கு எல்லாத் துன்பங்களினின்றும் விடுபடும் நிருவாணம் என்னுந் தூய நிலை தானே வருமென்றும், அறிவில்லாத ஏழை உயிர்களை ஆயிர மாயிரமாகக் கொன்று வேள்வி வேட்டலால் மேலும் மேலுந் தீவினையே விளையுமல்லது நல்வினை எய்தாதென்றுங் கௌதமர் அருள்கனிந்து அறிவுறுப்பாராயினர். மக்கள் உள்ளத்தை எளிதிலே கவர்ந்து உருக்கும்படியான கௌதமர் கொள்கைகள் சில நாளிலே எங்கும் பரவலாயின.

மக்களெல்லாரும் ஆரியக் குருக்கள்மார் சொற்களில் ஐயுறவு கொண்டு தம் அறிவால் நல்லன பலவும் ஆராயப்புகுந்தனர். எங்கும் அவரவர் தத்தங் கருத்துக்களிற் றோன்றும் நுட்பங்களைத் தாராளமாய் வெளியிடத் துணிந்தனர். பிராஞ்சுதேயத்திற்6 றோன்றியதை யொத்த ஒரு பெரிய மாறுதல் இந்திய நாடு முழுவதுஞ் சுழன்று வரும்போது, தென்னாட்டிலுள்ள தமிழருந் தாம் தமதுள்ளத்தே ஆராய்ந்து வைத்த அரியபெரிய நுண்பொருள்களை வெளியிட்டுத் தமது பண்டைத் தமிழ்மொழியினைப் பண்டைநாளிற் போலவே பெரிதும் வளம்படுத்தும் அரிய முயற்சியில் தலைநின்றார். இங்ஙனந் திருவள்ளுவர் பிறப்பதற்கு முன் ஒரு நானூறு ஆண்டும் பின் ஒரு நூறாண்டும் மிக விரிந்து பெருகிய சமய விளக்கமே அக்காலத்திற் றமிழ் மொழியின்கண் அரும்பெருஞ் செந்தமிழ் நூல்கள் பல தோன்றுதற்கு ஒரு பெருங்காரண மாயிற்று என்று தெளிவுற அறிதல் வேண்டும். ஆசிரியர் திருவள்ளுவ நாயனார் இயற்றிய அரியபெரிய திருக்குறள் என்னும் நூலிற் கொல்லாமை புலாலுண்ணாமை ஒழுக்கமுடைமை என்னுந் தமிழர்க்குரிய அறிவாழ நுட்பப் பொருள்கள் பலகாலும் பலவிடத்தும் எடுத்து வற்புறுத்தப்படுதல் காண்க.

இனி, இப் பொருள்களெல்லாம் பௌத்த சமய நூல்களிலிருந்தெடுத்துச் சொல்லப்பட்டன என்பாருந், திருவள்ளுவநாயனார் பௌத்தரே என்பாரும் உளர். இயற்கையிலே தமிழர்க்குரிய ஒழுக்கங்களின் விழுப்பத்தையே கௌதமர் என்னுந் தமிழ்ப் பெரியார் விளக்க வந்தமையால் அவ்வொழுக்க வரிசைகள் அவர் சொன்ன பின் எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது பொருந்தாது. திருவள்ளுவனார் முதலிய சான்றோன்றோர், தமக்குந் தம்மினத்தார்க்கும் இயற்கையிலே தோன்றிய அரும்பெருங் கருத்துக்களையே பௌத்த சமயம் யாண்டும் விரிந்து பரந்த காலத்தில் தடையின்றிச் சொல்லுதற்கு இடம்பெற்றாராகலின், அக்கருத்துகள் திருவள்ளுவனார்க்குங் கௌதம சாக்கியர்க்கும் பொதுவாவனவேயாம் என்று துணிக.

"அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று"

என்னுந் திருக்குறளில் ஆசிரியர் ஆரியமக்கள் செய்து போந்த வேள்வி வினையை மறுத்துக் கொல்லாமையின் சிறப்பை வலியுறுத்திக் கூறியதுங் காண்க. இன்னும் இவ்வாறே ஆசிரியர் ஆங்காங்கு ஆரியமக்கள் செய்து போந்த மற்றை வினைச்சடங்குகளையும் மறுத்துக் கூறுதல் கண்டு கொள்க. ஈண்டு அவையெல்லாம் எடுத்துரைப்பிற் பெருகும்.

இனி, இவ்வாறு ஒரு காலத்தில் நடைபெறும் ஒழுக்கங்களுக்கும் அக்காலத்திற் றோன்றும் நூல்களுக்கும் பெரியதோர் இயைபு உண்டென்பதனை விளக்குதற் பொருட்டே இவ்வோர் ஐந்நூறாண்டின்கண் நடைபெற்ற நிகழ்ச்சியினை ஒரு சிறிது விரித்துக் கூறினேம். ஒரு நூலின் இயல்பை உள்ளவாறு உணர்தற்கு அந்நூல் எழுதப்பட்ட காலத்தின் இயற்கை இன்றியமையாது அறியற்பாலதாகும். இதுபற்றியே ஆங்கில மொழியில் நுட்பவாராய்ச்சிகள் பல எழுதிய உவிலியம் மிண்டோ7 என்னும் ஆராய்ச்சி உரைகாரர், "காலப்போக்கு என்பது இன்னதென்று தொட்டு அறியப்படாத ஓர் இயற்கை வாய்ந்தது; அஃது அக்காலத்து மக்கள் இயற்றும் நூல்களிலுங், கொத்து வேலைகளிலும், உடைகளிலும், அவர்கள் நடாத்தும் வாணிக வாழ்க்கையிலும், அவர்கள் அமைக்குந் தொழிற்களங்களிலும் எல்லாந் தன் அடையாளத்தைப் பதிய இடுகின்றது * * * ஒரு புலவனும் ஒரு கால இயற்கையின் வழிநின்றே நூல் எழுதுபவனாவன்; அக்கால இயற்கை அல்லது அம் மக்கள் ஒப்புரவு அவன் எழுதுவனவற்றை எல்லாந் தன் உருவாக்கி அவற்றிற்குத் தன் நிறத்தை ஊட்டுகின்றது. இதனை நாம் கண்டறிவதற்கு அக்காலத்தின் பொது இயற்கையும், அதன்கண் அவன் குறிப்பிட்ட மக்கள் நடையினியற்கையும், அவன் இருக்கும் இடத்தின் இயற்கையும் இன்றியமையாது ஆராயற்பாலனவாகும்"8 என்று மிக நுட்பமாக எடுத்து மொழிந்திட்டார். அது கிடக்க.

இனி, இவ்வோர் ஐந்நூறாண்டிற் றோன்றிய நூல்களெல்லாம் பெரும்பாலும் அக்கால இயற்கை தங்கண் எதிர்தோன்றி விளங்கப்பெறும் ஒரு தன்மையுடையவாகு மென்று தெரிதல் வேண்டும். அறிவு ஆழமின்றி ஆரிய மக்கள் செய்துபோந்த வீணான வெறுஞ்சடங்குகளிற் கட்டுப்படாமல் தனியே பிரிந்து நின்ற தமிழ்மக்கள், தம் பண்டையாசிரியர்கள் சென்ற முறையே உலக இயற்கையினையும் மக்களியற்கையினையும் உள்ளுருவி நுழைந்து ஆராய்ந்து தாங்கண்ட அரிய பொருள் நுட்பங்களை அமைத்து நூல்கள் இயற்றினார். ஆகவே, உலக இயற்கையினையும் மக்கள் இயற்கையினையும் ஆராயும் ஆராய்ச்சி இக்காலத்துத் தோன்றிய நூல்கட்கெல்லாம் பொதுத் தன்மையாகுமென்றுணர்ந்து கொள்க.

இனி, இவ்வுலக இயற்கையினை ஆராயும் நூல்கள் எல்லாம் புறப்பொருள் எனவும், மக்களியற்கையினை ஆராய்வனவெல்லாம் அகப்பொருள் எனவுந் தொல்லாசிரியரால் வகுக்கப்பட்டன. இவற்றுள் 'அகப்பொருள்' என்பது ஆண்பெண் என்னும் இருபாலரையுஞ் செறியப் பொருத்துவதாய், மற்றெல்லா உணர்வுகளையும் நினைவுகளையுந் தனக்குக் கீழாக நிறுத்தித் தான் அவற்றின் மேல் அமர்ந்து தனக்கு நிகரின்றிப் பெருமையுடன் தோன்றுவதாய், இன்பமுந் துன்பமுமெல்லாந் தோன்றுதற்குத் தான் நிலைக்களனாய், எல்லா உலகங்களும் எல்லாப் பொருள்களுந் தன்னைச் சுற்றிச் சுழன்று செல்லத் தான் அவற்றின் இடையே சிறிதுந் திரிபின்றி நிலைபெற்று விளங்குவதாய் உள்ள அன்பு அல்லது காதல்9 என்பதனை அடிப்படையாகக் கொண்டு மக்களியற்கை முழுவதூஉம் ஒருங்கே ஆராய்வதாகும். இனிப், 'புறப்பொருள்' என்பது மக்கள் உலக இயற்கையுடன் பொருந்தித் தமக்கு இன்றியமை யாதவன பல்வகை முயற்சிகளையும் முற்றுப் பெருவித்தற் பொருட்டுச் செய்யுந் தொழில் வேறுபாடுகளும் பிறவுந் தெள்ளிதின் ஆராய்வதாம்.

இனிப், பொதுவாக எல்லா மாந்தர்க்கும் உரிய இயற்கையினைப் பகுத்துரைப்பதாகலின், அகப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களிற் சிறப்பாக ஓர் ஆண்மகனையும் ஒரு பெண்மகளையும் எடுத்து வைத்து, அன்னவர் தமக்குரிய பெயர்சொல்லி அவை தாம் எழுதப்படுதல் இல்லை. எல்லா மக்கட்கும் பொதுவாய் வருகின்ற அன்பினால் நிகழும் ஐந்திணை ஒழுக்கத்தை ஒருவர் இருவர்க்கு வரையறுத்துக் கூறுதல், அவ்வன்பின் ஐந்திணையொழுக்கம் ஏனையோர்க்கு இல்லையாம் போலும் என மலைவு தோற்றுவித்து வழுவாய் முடிந்திடுமாகலின், அப்பாட்டுக்கள் எல்லாங் குறித்து ஒருவர் பெயர் சொல்லாமலே வரையப்படும் என்பது தெளிந்து கொள்க. இது கடைப்பிடியாய் உணர்த்துதற்கே ஆசிரியர் தொல்காப்பியனார்,

"மக்கள் நுதலிய அகன்ஐந் திணையுஞ்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்"10

என்று கிளந்து கூறினார்.

இனி, இதுபோற், பொதுவாக வன்றி, மக்களுள் ஒவ்வொருவருந் தத்தம் முயற்சி வேறுபாடுகளுக்கு ஏற்பப் பல்வகைப்பட்ட உணர்வும் பல்வகைப்பட்ட செயலும் உடையராய் உலகநடையறிந்து ஒழுகுவராகலின், இங்ஙனமான அவர்தம் புறப்பொருள் ஒழுக்கம் பயின்றுவரும் பாட்டுக்களில் அவ்வவர்க்கே உரிய பெயர் பண்பு செயல் முதலியன எல்லாங் கிளந்தெடுத்துக் கூறி மற்று அவை எழுதப்படும் என்க. ஒருவர் பண்புஞ் செயலும் ஏனையொருவர் பண்புஞ் செயலும் போலன்றி உலகநடையிற் பெரும்பான்மையும் வேறுபட்டு வெளியே தோன்றிக் கிடத்தலால், அங்ஙனம் வெளிப்பட்டுத் தோன்றும் பண்புச் செயல்களைக் கூறும் புறத்திணைப் பாட்டுக்களில் அவ்வப் பண்பு செயல்கட்கு உரியார் பெயர் கூறல் வேண்டுவது இன்றியமையாததேயாம் என்க. இந்நெறி அறிவுறுத்துதற் பொருட்டே ஆசிரியர் தொல்காப்பியனார்,

"புறத்திணை மருங்கிற் பொருந்தி னல்லது
அகத்திணை மருங்கின் அளவுத லிலவே"11

என்று கூறினார்.

இனி, அகம், புறம் என்னும் இவ்விருவகை ஒழுக்கமுங் கலந்துவரும் பாட்டுக்களில் அகவொழுக்கமே பெரும்பாலும் முன்னும் பின்னுந் தொடர்புற்றுச்செல்ல, அதன் இடையே ஒரு புறவொழுக்கஞ் சிறுகிவருமாயின் அவற்றுள்ளும் ஒருவர்பெயர் குறித்துச் சொல்லப்படுவதில்லை. அவ்வாறன்றி, அவற்றுள் முன்னும் பின்னும் ஒரு புறவொழுக்கமே தொடர்புற்றுச் செல்ல இடையே ஓர் அகவொழுக்கங் குறுகி வருமாயின் அவற்றுள் அவ்வொழுக்கம் உடையார் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும். இவ்வாறன்றி அகப் புறவொழுக்கங்கள் இரண்டும் இணைந்து ஒப்ப வருமாயின் அங்கும் அம்மக்கள் பெயர் பண்பு முதலாயின கிளந்து சொல்லப்படும் என்பது அறிக. இங்குச் சொல்லப்பட்ட இவ்விலக்கணங்கள் இவ்வைந்நூறாண்டிற் பிறந்த நூல்களிலெல்லாம் இனிது காணப்படும்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP